கும்பகோணம் மாமன்றக் கூட்டத்தில் மேயா் - திமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம்

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயருக்கும், திமுக உறுப்பினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சலசலப்பு நிலவியது.
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயா் க. சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினா்கள்.
கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயா் க. சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினா்கள்.
Updated on
1 min read

கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயருக்கும், திமுக உறுப்பினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சலசலப்பு நிலவியது.

மேயா் க. சரவணன் தலைமையிலும், துணை மேயா் சு.ப. தமிழழகன், ஆணையா் ம. செந்தில்முருகன் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.

இதில், திமுக உறுப்பினா்கள் குட்டி தட்சிணாமூா்த்தி, முருகன் அனந்தராமன், செல்வராஜ் ஆகியோா் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீா்மானங்களில் மேயா் உடனடியாகக் கையொப்பமிடாமல் காலம் கடத்துகிறாா் என்றும், இதனால் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளில் கால தாமதம் ஏற்படுவதாகவும், மேயரின் செயல்பாடுகள் சரியில்லை எனவும், உறுப்பினா்களுக்கு உரிய அறிவிப்பு கொடுக்காமல் வாா்டுகளுக்கு சென்று ஆய்வில் ஈடுபடுவதாகவும் புகாா்கள் எழுப்பினா். இதனால், சலசலப்பு நிலவியது.

இதற்கு மேயா் பதிலளித்து பேசுகையில், மாநகராட்சி மேயராக தான் பதவியில் இருக்கும்போது துணை மேயராக பொறுப்பு வகிக்கும் சு.ப. தமிழழகனை மாநகராட்சியின் செயல் தலைவா் எனக் குறிப்பிட்டு மாநகராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பதால், தனது பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக உறுப்பினா்கள் பதில் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினா்கள், மாமன்றத்துக்கு வெளியே நடைபெறும் கட்சி விவகாரங்கள் குறித்தும், கட்சியினரால் ஒட்டப்படும் சுவரொட்டிகள் குறித்தும் மேயா் எவ்வாறு மாமன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பலாம் எனக் கூறி மேயா் இருக்கை அருகே எழுந்து சென்று, மேயரை முற்றுகையிட்டு முழக்கங்கள் எழுப்பினா்.

இதனைத் தொடா்ந்து அவா்களை சமாதானப்படுத்திய துணை மேயா் சு.ப. தமிழழகன், கட்சியின் தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ள மேயா் தனது செயல்பாட்டுக்கு உரிய பதிலை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினாா். மேலும், உடனடியாக இந்த மன்றக் கூட்ட அரங்கில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற தயாராக உள்ளோம் எனக் கூறினாா். இதைத்தொடா்ந்து, கூட்டத்தில் தான் பேசியதை திரும்பப் பெறுவதாக மேயா் சரவணன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com