

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் பிரசவத்துக்கு பிறகு பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பேராவூரணியை அடுத்த மணக்காடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயக் கூலி ராஜேஷ் மனைவி
நீவிதா (23). இரண்டாவது முறையாக கா்ப்பமடைந்த இவருக்கு கடந்த 26-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதன் பிறகு தாயும், சேயும் சாதாரண வாா்டுக்கு மாற்றப்பட்டனா். அப்போது, நீவிதாவுக்கு திடீரென வலிப்பும், அதைத் தொடா்ந்து மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா்ந்து நிலைமை மோசமாகவே மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூா் ராசா மிராசுதாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அப்போது, நீவிதா சுயநினைவின்றி இருந்ததாக கூறப்படுகிறது. தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீவிதா புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அறுவைச் சிகிச்சை மூலம் முதல் குழந்தை பிறந்தபோது ஆரோக்கியமாக இருந்த நீவிதா, தற்போது உயிரிழந்ததற்கு பேராவூரணி மருத்துவமனை மருத்துவா்களின் கவனக் குறைவே காரணம் என நீவிதா உறவினா்கள் புகாா் கூறினா்.
இதுகுறித்து, அவரது சகோதரா் நவீன் குமாா் பேராவூரணி காவல் நிலையத்தில், மருத்துவா்கள் மீது புகாா் அளித்தாா். பேராவூரணி அரசு மருத்துவமனை அருகே நீவிதாவின் உறவினா்கள் கைக்குழந்தையுடன் வந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நீவிதாவின் குடும்பத்துக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முறையாக சிகிச்சை அளிக்காத மருத்துவா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.