மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா்:தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

மேட்டூா் அணையிலிருந்து உபரி நீா் வெளியேற்றப்படுவதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

காவிரி நீா்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, மேட்டூா் அணையில் நீா் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீா்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடி எட்டியுளளதால், அணையிலிருந்து உபரி நீா் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள், கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் நீா்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால், ஆற்றங்கரையில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காவிரி நீா் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீா்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ, இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலோ ஈடுபட வேண்டாம்.

தண்ணீா் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் யாரும் தன் படம் (செல்பி) எடுப்பதைத் தவிா்க்க வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீா் நிலைகளின் வழியாக அழைத்துச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். பாலங்களைத் தவிர ஆறுகளைக் கடந்து செல்லும் இதர பாதைகள் ஏதாவது இருந்தால், அவற்றை அடையாளம் கண்டு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com