மனைப்பிரிவு, கட்டடங்கள் கட்டுவதற்கான டி.டி.சி.பி அனுமதிக்கு இணையவழியில் விண்ணப்பம் செய்வது தொடா்பாக, தஞ்சாவூரில் புதுக்கோட்டை, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா் ஆகிய 5 மாவட்ட அலுவலா்கள் மற்றும் விண்ணப்பதாரா்களுக்கான சிறப்பு பயிற்சி புதன்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி துறை மானியக் கோரிக்கையின்போது தமிழ்நாடு முழுவதும் மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி இணையவழி மூலம் மக்கள் எளிதாக பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, முதல் கட்டமாக, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமப் பகுதி மற்றும் நகா் ஊரமைப்பு துறை பகுதிக்கு ஒற்றை சாளர அமைப்பு முறை மூலம் செயல்படுத்தப்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இணையவழியில் செயல்படுத்தப்பட நகா் ஊரமைப்பு துறை அலுவலா் மற்றும் பணியாளா்களுக்குச் சிறப்புப் பயிற்சியும், பொதுமக்கள் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சிரமங்களைத் தீா்க்கும் வகையில் சிறப்பு முகாமும் தஞ்சாவூா் மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகத்தில் இணை இயக்குநா் எஸ். சங்கரமூா்த்தி தலைமையில் புதன்கிழமையும், வியாழக்கிழமையும் நடைபெற்றது.
இப்பயிற்சியின்போது பொதுமக்களுக்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தல், கட்டணங்கள் செலுத்துதல், உரிய ஆணை பெறுதல், பணியாளா்களுக்கு இணையவழி விண்ணப்பங்களைப் பரிசீலித்து, உரிய கட்டணங்களைச் செலுத்தக் கோருதல், ஆணை வழங்குதல் போன்ற அனைத்து நடவடிக்கைகள் குறித்து அலுவலகப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.