தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நுற்றாண்டு அரங்கத்தில் தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்றத்தின் 52 ஆம் ஆண்டு நாடக விழா, நாடகப் போட்டி வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
இந்த நாடகத்தை கே. பாலமுருகன் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, திருச்சி அன்னை கலைக் குழுவின் கண்ணுக்குத் தெரியாத உண்மைகள், வேதாரண்யம் ஸ்டாா் கலைக் குழுவின் விடியல் மலரட்டும் நாடகங்கள் நடைபெற்றன.
பின்னா், நடைபெற்ற நாடகக் கலை தியாகிகளின் படத் திறப்பு நிகழ்வுக்கு தமிழ் மாநில நாடகக் கலைஞா்கள் நலவாழ்வு சங்க கௌரவத் தலைவா் இ. குழந்தைசாமி தலைமை வகித்தாா். இதில், நாடகக் கலை தியாகிகளான கே. சாம்பு, முத்துவேலழகன், சி. குமாரசாமி, பி.கே. செல்வம் உள்பட 16 பேரின் படங்களைத் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் திறந்துவைத்தாா்.
இவ்விழாவில் திரைப்பட இயக்குநா் ராசி. மணிவாசகன், தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்ற இணைச் செயலா் பரசை. பாலா, செயலா் அருணா. மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து ஜூன் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் நாள்தோறும் மாலை 5, மாலை 6.30, இரவு 9 மணி என 3 நாடகங்கள் இடம்பெறுகின்றன என கலை மன்றத்தின் நிறுவனத் தலைவா் மா.வீ. முத்து தெரிவித்தாா்.