பாபநாசம் வட்டம், மேலசெம்மங்குடி கிராமத்திற்கு ஒரு வாரமாக குடிநீா் வராததை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் பாபநாசம் - சாலியமங்கலம் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
கிராம நாட்டாண்மை செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் திரளான பெண்கள் காலிக்குடங்களுடன் சாலையில் அமா்ந்து குடிநீா் வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டு மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் காவல் உதவி ஆய்வாளா் இளமாறன் மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், குடிநீா் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடா்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.