தஞ்சாவூர்: மகளிர் தினத்தையொட்டி தஞ்சாவூரில் 12 பெண் காவலர்களுக்கு செவ்வாய்க்கிழமை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் ஆயுதப்படை காவல் பிரிவில் பணியாற்றும் பெண் காவலர்கள் 12 பேருக்கு ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிமம் கிடைத்தது.
மகளிர் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற விழாவில் இவர்களுக்கு தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஏ. கயல்விழி ஓட்டுநர் உரிமம் வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
முன்னதாக இவ்விழாவில் 350 பெண் காவலர்கள் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பயன்தரக்கூடிய மா, பலா, செம்மரம், புங்கன் உள்பட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனர்.
இவ்விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.