தஞ்சாவூர்: தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திறந்தவெளியில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, ஒரே இடத்தில் தொழுகை நடத்தினர்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில், நோன்பும் ஒரு கடமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைக் கடைபிடிக்கும் வகையில் ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொண்டனர். 30 நாள்கள் நோன்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
இதைப்போல் தஞ்சாவூர் கீழவாசல் அண்ணா மண்டபத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் திறந்தவெளியில் ரமலான் தொழுகையை நிறைவேற்றினர்.
இதில் பெண்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்த தனியாக ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.