தஞ்சாவூர்: ஓலா, ஊபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட தஞ்சை ஆட்டோ ஓட்டுநர்கள், ஒன்று கூடி ஜிபிஎஸ் கருவி இணைப்புடன் கூடிய 'சுதந்திர மீட்டர் ஆட்டோ' என்கிற ஆப் மூலம் 2 கிலோமீட்டர் தூரம் வரை 49 ரூபாய் கட்டணம் பெறுவது என்கிற முடிவிற்கு வந்துள்ளனர். மீட்டர் பொருத்தினால் சூடு வைப்பார்கள், பேசிய தொகைக்கும் மேல் கேட்பார்கள் என்கிற கெட்ட பெயர் இனி தங்களுக்கு ஏற்படாது என்றும் தஞ்சை ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் என்றாலே கட்டணம் கூடுதலாக கேட்டு தொந்தரவு செய்வார்கள், மீட்டர் பொருத்திய ஆட்டோ என்றால் சூடு வைத்து விட்டார்கள் அதனால் காசு அதிகமாகிவிட்டது என்கிற பிரச்னையில் சிக்க விரும்பாமலும், ஓலா, ஊபர், பெரும் நிறுவனங்களிடையே சிக்கி பாதிக்கப்பட கூடாது என்று விரும்பிய தஞ்சை ஆட்டோ ஓட்டுநர்கள் அரசின் முறையான அனுமதியுடன் ஜிபிஎஸ் மீட்டர் கருவியுடன் கூடிய ஆஃப் ஒன்றை உருவாக்கி சுதந்திர மீட்டர் ஆட்டோ என்று பெயரிட்டு குறைந்த கட்டண சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல பெயரெடுக்கவும், மக்களுக்கு குறைந்த கட்டணத்திலும் தங்களுக்கு அதிக சவாரியும் கிடைத்து இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் என்கிற நம்பிக்கையுடன் துவங்கியுள்ள சுதந்திர மீட்டர் ஆட்டோ சேவை திருச்சி, கோவை, தென்காசி, உள்ளிட்ட பகுதிகளிலும் வெற்றிகரமாக இயங்குவதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: மும்பையில் சிறுமியை துன்புறுத்திய வாகன ஓட்டுநர் கைது