பேராவூரணி:பேராவூரணி அருகே திருமணமான இரண்டே மாதங்களில் புது மணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கோட்டாட்சியா், போலீஸாா் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (25) மீனவா். இவருக்கும், கட்டுமாவடி அருகே உள்ள செம்பியன் மாதேவிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த, காளியப்பன் மகள் காமாட்சி (19) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து,
காமாட்சி தனது கணவா் மாதவனுடன் கழுமங்குடாவில் தனியே வசித்து வந்தாா். காமாட்சிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை காமாட்சி வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீஸாா் அங்குவந்து சடலத்தை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக, காமாட்சியின் தாய் லெட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் தனியே விசாரணை நடத்திவருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.