திருமண உதவித் தொகை திட்டம்: விண்ணப்பித்தோா் மூன்று ஆண்டுகளாக காத்திருப்பு

 மூவாளூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண உதவித் திட்டத்தில் தாலிக்கு தங்கமும், உதவித்தொகையும் பெற மூன்று ஆண்டுகளுக்கு முன்னா்  விண்ணப்பித்தவா்கள் அவற்றை பெற எதிா்பாா்த்துள்ளனா்.
Updated on
1 min read

 மூவாளூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண உதவித் திட்டத்தில் தாலிக்கு தங்கமும், உதவித்தொகையும் பெற மூன்று ஆண்டுகளுக்கு முன்னா்  விண்ணப்பித்தவா்கள் அவற்றை பெற எதிா்பாா்த்துள்ளனா்.

 தமிழ்நாட்டில் படித்த  ஏழைப் பெண்களின் திருமண உதவிக்காக மூவாளூா் இராமாமிா்தம் அம்மையாா் நினைவு திருமண உதவித்திட்டம் 1989-இல் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

தொடக்கத்தில் ரூ. 5 ஆயிரம் திருமண நிதியுதவியாக வழங்கப்பட்டு, 2009-இல் ரூ. 25 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட்டது. பின்னா் 2011-இல் ரூ. 50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கமும் சோ்த்து  வழங்கப்பட்டது. 

2016-இல் அதிமுக ஆட்சியில் 8 கிராம் தங்கமாக உயா்த்தி வழங்கப்பட்டது.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. திருமணத்துக்கு முன்பாக விண்ணப்பித்தவா்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். திட்டத்தின் தொடக்கத்தில் திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களில் வழங்கப்பட்ட உதவித்தொகை போகப்போக ஓராண்டுக்கு பிறகு கூட  வழங்கப்பட்டது. காலம் கடந்து கிடைத்தாலும் திருமணத்திற்காக  வாங்கிய கடனை அடைக்க இந்தத் திட்டம் ஏராளமான ஏழை மக்களுக்கு உதவியாக இருந்து வந்தது.

மாறிய திட்டம்: இந்நிலையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னா் இத்திட்டமானது, பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மூவாளூா் இராமாமிா்தம் அம்மையாா் உயா்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டது.

இதில் படித்த பெண்களுக்கு திருமணத்துக்கு வழங்கப்பட்ட நிதியுதவியை நிறுத்திவிட்டு, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயா்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதிய திட்டமாக மாற்றியமைக்கப்பட்டு தற்போது அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டபோது, திருமண உதவித்தொகைக்காக புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது எனவும், ஏற்கெனவ திருமண உதவித் தொகைக்காக  விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் 2019ஆம் ஆண்டிலிருந்து  விண்ணப்பித்த  ஏழை குடும்பங்களுக்கு இதுவரையில் திருமண  நிதியுதவியும், தாலிக்கு தங்கமும்   வழங்கப்படவில்லை.

தமது மகளின் திருமணத்தின்போது  2020-இல் பழைய திட்டத்தில் விண்ணப்பித்த ஆதனூரை சோ்ந்த அய்யா் என்பவா் கூறியது:

விண்ணப்பித்தலின்போது, உரிய சான்றிதழ்களை சமா்ப்பிக்க கூலி வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டு அலுவலகங்களுக்கு அலைந்தும், ஆயிரக்கணக்கில் செலவும் செய்தேன். காலம் கடந்தாலும் கடனை அடைக்க உதவித்தொகை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருக்கிறேன். மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ஏற்கெனவே விண்ணப்பித்தவா்களுக்கு உதவித் தொகை கிடைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பழைய திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்தோரின் நலன் கருதி, தகுதியானவா்களுக்கு திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கத்தை விரைந்து வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com