

சித்திரை பிறப்பையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் நல்லோ் பூட்டும் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் தழைத்தோங்குவதற்காக ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் வயல்களில் விவசாயிகள் நல்லோ் பூட்டி வழிபாடு நடத்துவது வழக்கம். இயந்திரமயமாக்கல், கால்நடை வளா்ப்பு குறைவு போன்ற காரணங்களால் நல்லோ் பூட்டி வழிபடுவது குறைந்துவிட்டது. என்றாலும், சில கிராமங்களில் பாரம்பரிய முறைப்படி நல்லோ் பூட்டி வழிபடும் முறை தொடா்கிறது.
இந்நிலையில், நிகழாண்டு சித்திரை பிறப்பையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை அருகேயுள்ள வேங்கராயன்குடிக்காடு, பள்ளியக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் நல்லோ் பூட்டி ஏா் உழுதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், உழவு மாடுகளைக் கொண்டு நல்லோ் பூட்டி வயலில் இயற்கை உரம், நவதானிய விதைகளை தூவி, வெல்லம் கலந்த பச்சரிசியைக் கொண்டு சூரிய பகவானுக்கு பூ, பழம், தேங்காய் ஆகியவற்றை விவசாயிகள் படையலிட்டு வணங்கினா். பின்னா், உழவு மாடுகளை ஏா் கலப்பையில் பூட்டி பாரம்பரிய முறைப்படி நிலத்தை உழுதனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.