தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை பிற்பகல் சாலையைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த திருச்சி அன்பாலயம் தொண்டு நிறுவன இயக்குநர் உயிரிழந்தார்.
திருச்சி அருகே குண்டூர் சத்யா நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (57). வழக்குரைஞர். இவர் அன்பாலயம் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி, அதன் இயக்குநராக இருந்து வந்தார். இவர் திருச்சியிலும், தஞ்சாவூரிலும் மன நலன் பாதிக்கப்பட்டு சாலையில் திரிபவர்களை மீட்டு காப்பகத்துக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பது, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் போன்றவை நடத்தி வந்தார்.
இந்நிலையில், திருச்சியிலிருந்து தஞ்சாவூருக்கு மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை பிற்பகல் வந்து கொண்டிருந்தார். தமிழ்ப் பல்கலைக்கழகம் எதிரில் வந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
இதனால், பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் செந்தில்குமார் மாலையில் உயிரிழந்தார். அடையாளம் தெரியாத மற்றொரு நபர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.