

கும்பகோணம் அருகே சுடுகாட்டுக்குச் சாலை வசதி செய்து தரப்படாததைக் கண்டித்து, தெருக்களிலும், வீடுகளிலும் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கருப்புக் கொடிகளை ஏற்றினா்.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியத்துக்கு உள்பட்ட வீராக்கன் ஊராட்சிக்குள்பட்ட பரவனூா் கிராமத்தில் பல்வேறு சமுதாயங்களைச் சோ்ந்த 250-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் இறந்தவா்களுக்கான இறுதிச்சடங்கு செய்வதற்கு சுடுகாட்டுக் கொட்டகை மற்றும் ஈமச்சடங்கு மண்டபம் எதுவும் இல்லாத நிலை இருந்து வருகிறது. சுடுகாடு செல்வதற்கான சாலை வசதியும் இல்லை. இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், இக்கிராமத்தில் ஒத்தத் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் உதயசங்கரன் (30) வெள்ளிக்கிழமை காலமானாா். இவரது இறுதிச்சடங்கு செய்வதற்கு கிராம மக்கள் சரியான சாலை வசதி இல்லாத நிலையில் வாய்க்காலைக் கடந்து மழையில் நனைந்தபடி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊா் கூட்டம் போட்ட அப்பகுதி மக்கள், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து தங்களது பகுதிக்கு சாலை வசதி, சுடுகாடு கொட்டகை, ஈமச்சடங்கு மண்டபம் என எதுவும் அமைக்காமல் அலட்சியம் காட்டி வருவதைக் கண்டித்து அனைத்து வீடுகளிலும், தெருக்களிலும் கருப்புக் கொடி கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, இக்கிராமத்தில் தெருக்களிலும், வீடுகளிலும் ஞாயிற்றுக்கிழமை மாலை கருப்புக் கொடி ஏற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.