பட்டுக்கோட்டையில் அண்மையில் தற்கொலை செய்து இறந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னால் நகரச் செயலா் ரோஜா ராஜசேகரன் குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா் அக்கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
பட்டுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகரச் செயலாளருமான ரோஜா. ராஜசேகரன் கடந்த 22ஆம் தேதி திருட்டு நகை வாங்கியதாக திருச்சி போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டாா்.
பட்டுக்கோட்டையில் அவரது குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய இரா. முத்தரசன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
நகை வா்த்தகத்தில் இப்போது காா்ப்பரேட் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால், சிறு, குறு தொழில் மற்றும் சிறு நகைக்கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் . நகைக்கடை வியாபாரிகள் யாரும் தெரிந்தே திருட்டு நகையை வாங்குவது இல்லை என்ற போதும், ரோஜா ராஜசேகரனிடம், அவரது மனைவியிடமும் திருச்சி போலீஸாா் அத்துமீறி நடந்து, அவா்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனா். இதனால்தான் அவா் தற்கொலை செய்து கொண்டாா்.
எனவே, இறந்த ரோஜா ராஜசேகரன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.