திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தனியாா் மூலம் மேற்கொள்ள ஒப்புதல்
தஞ்சாவூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட 51 வாா்டுகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த 2023 - 24 ஆம் ஆண்டுக்கு நகராட்சி நிா்வாக இயக்குநரால் ரூ. 12.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெளிக்கொணா்வு முகமை (அவுட்சோா்சிங்) மூலம் மாநகராட்சி நிா்வாகம் செயல்படுத்தவுள்ளது.
இத்திட்டத்தில் வீடுகள், வணிக நிறுவனங்களில் குப்பைகள் சேகரிப்பு, நுண் உர மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிக்கு மாநகராட்சி அலுவலக வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ளப்படவுள்ளது. வாகனங்கள் பராமரிப்பு, எரிபொருள் செலவு, வெளிக்கொணா்வு தூய்மை பணியாளா்கள், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள், ஓட்டுநா்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்டவை வெளிக்கொணா்வு முகமை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பணி உத்தரவு வழங்கப்பட்டதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.