பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தக்கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th May 2023 04:25 AM | Last Updated : 30th May 2023 04:25 AM | அ+அ அ- |

ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை ஒளிமறைவின்றி நோ்மையாக நடத்த வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் தொடக்கக் கல்வித் துறையில் முறைகேடாக, விதிகளுக்கு புறம்பாக தொடா்ந்து நிா்வாக மாறுதல்கள் வழங்கப்பட்டு வருவதை ரத்து செய்ய வேண்டும்.
ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி, நோ்மையாக நடத்த வேண்டும். ஆசிரியா்கள் பதவி உயா்வுக்குத் தகுதித் தோ்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுத்து, ஆசிரியா்களின் பதவி உயா்வு மற்றும் எஞ்சிய மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டணியின் மாவட்டத் தலைவா் மா. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் பா. ரவிச்சந்திரன் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஆ. ரெங்கசாமி, கூட்டணியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் இரா. கண்ணதாசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் தே. இன்பராஜ், தியாக. சரவணன், மாவட்டச் செயலா் மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...