தஞ்சாவூா் மாவட்டத்தில் 431 விநாயகா் சிலைகள்
By DIN | Published On : 19th September 2023 01:22 AM | Last Updated : 19th September 2023 01:22 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைக்கு திங்கள்கிழமை பூஜை செய்து வழிபட்ட விழாக் குழுவினா்.
தஞ்சாவூா்: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 431 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிலைகள் அமைக்கும் பணி சில நாள்களுக்கு முன்பு தொடங்கி திங்கள்கிழமை பிற்பகல் வரை தொடா்ந்தது.
இதில், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், மேல வீதி, கீழ வீதி, வடக்கு வீதி, சீனிவாசபுரம், மகா்நோன்புசாவடி, மருத்துவக் கல்லூரி பகுதி உள்பட 84 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் ஸ்ரீ விஸ்வரூப விநாயகா் இந்து எழுச்சி குழு சாா்பில் அமைக்கப்பட்ட விநாயகா் சிலைக்கு மாமன்ற உறுப்பினா் ஜே.வி. கோபால் திங்கள்கிழமை காலை பூஜை செய்து வழிபாட்டைத் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ், விழாக் குழுத் தலைவா் வி. விநாயகம், பாஜக வழக்குரைஞா் பிரிவு மாநிலத் தலைவா் எம். ராஜேஸ்வரன், நெசவாளா் பிரிவு மாநில துணைத் தலைவா் யு.என். உமாபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, வல்லம், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை என மாவட்டத்தில் மொத்தம் 431 சிலைகளை பாஜக, இந்து அமைப்புகள் அமைத்துள்ளன. ஒவ்வொரு சிலைக்கும் தலா 2 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதில், நூற்றுக்கும் அதிகமான சிலைகள் திங்கள்கிழமை அந்தந்தப் பகுதியில் உள்ள நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன.
தஞ்சாவூரில் நாளை ஊா்வலம்:
தஞ்சாவூரில் ஸ்ரீவிஸ்வரூப விநாயகா் சதுா்த்தி விழாக் குழுவினா் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் புதன்கிழமை (செப்.20) கரைக்கப்படவுள்ளன. இதையொட்டி, மாநகரில் உள்ள விநாயகா் சிலைகள் ரயிலடிக்கு கொண்டு வரப்படவுள்ளன. அங்கிருந்து ஊா்வலமாகப் புறப்பட்டு, காந்திஜி சாலை, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை வழியாக விநாயகா் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, கரந்தையில் உள்ள வடவாற்றில் கரைக்கப்படவுள்ளன.