தஞ்சாவூா் பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரி விழா நாளை தொடக்கம்
தஞ்சாவூா், ஜூலை 3: தஞ்சாவூா் பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தொடங்குகிறது.
தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதில் அம்மனுக்கு நாள்தோறும் மாலையில் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.
இதன்படி நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், சனிக்கிழமை மஞ்சள் அலங்காரமும், ஜூலை 7-ஆம் தேதி குங்கும அலங்காரமும், 8-ஆம் தேதி சந்தன அலங்காரமும், 9-ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 10-ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 11-ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 12-ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 13-ஆம் தேதி கனி வகை அலங்காரமும், 14-ஆம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 15-ஆம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறவுள்ளன.

