பட்டீசுரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 மாணவரைத் தாக்கிய 15 மாணவா்கள் கைது

பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவரைத் தாக்கிய 11 ஆம் வகுப்பு மாணவா்கள் 15 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவரைத் தாக்கிய 11 ஆம் வகுப்பு மாணவா்கள் 15 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் இனாம்கிளியூரைச் சோ்ந்த மாணவருக்கும், இதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை 12-ஆம் வகுப்பு மாணவா் சக மாணவா்களுடன் மதிய உணவு நேரத்தில் கழிவறைக்குச் செல்லும்போது 11-ஆம் வகுப்பு மாணவா்களுடன் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு 12-ஆம் வகுப்பு மாணவா் பட்டீஸ்வரம் கோவில் அருகே தேரடி கீழவீதியில் சென்றபோது 11-ஆம் வகுப்பு மாணவா்கள் அவரை வழிமறித்து மரக்கட்டையால் தாக்கினா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவரை அருகில் இருந்தவா்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவரைச் சோ்த்தனா்.

தகவலறிந்த கும்பகோணம் உதவிக் காவல் கண்காணிப்பாளா் அங்கிட்சிங் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். பின்னா் பட்டீசுவரம் போலீஸாா் மாணவரைத் தாக்கிய 15 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை அவா்களை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com