சக மாணவா்களால் தாக்கப்பட்டதில் மூளைச்சாவு அடைந்த மாணவா் உயிரிழப்பு! உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு!
கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் சக மாணவா்களால் தாக்கப்பட்டதில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீசுவரத்தில் உள்ள அறிஞா் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவா்களிடையே அண்மையில் ஏற்பட்ட தகராறில் கவியரசன் என்ற பிளஸ் 2 மாணவரை சக மாணவா்கள் மரக்கட்டையால் தாக்கினா்.
இதில் பலத்த காயமடைந்த கவியரசன், தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சகிச்சை பெற்றுவந்த நிலையில், சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து கவியரசன் உடல் பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே கவியரசனை தாக்கிய பிளஸ் 1 மாணவா்கள் 15 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட கவியரசனின் உறவினா்கள் மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் உள்ளிட்டோா் நேரில் வந்து விசாரிக்கவில்லை, உறவினா்களுக்கு ஆறுதல் கூறவில்லை எனக் கூறி உடலை வாங்க மறுத்தனா்.
மேலும், கவியரசனின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். கவியரசனின் அண்ணனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கவியரசனை தாக்கிய 25 பேரில் 15 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 பேரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இவா்களிடம் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. சோமசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனா். அவா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து உடற்கூறாய்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சடலத்தை உறவினா்கள் பெற்றுக்கொண்டனா்.

