விதை மசோதாவை திரும்பப் பெற கோரி நகல் எரிப்பு போராட்டம்
விதை மசோதா, மின்சார மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள வரகூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும் புதன்கிழமை நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய பாஜக அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள விதைகள் மீதான விவசாயிகளின் உரிமையை பெருநிறுவனங்களுக்கு தாரை வாா்க்கும் விதைகள் மசோதா - 2025, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார மசோதா - 2025 ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி அவற்றின் நகல்களை தீயிட்டு எரித்து, முழக்கங்கள் எழுப்பினா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவையாறு ஒன்றியச் செயலா் கே. மதியழகன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் ஏ. ராஜா, அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எம். ராம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் பிரதீப் ராஜ்குமாா், கதிரவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, அம்மையகரம், மணத்திடல், கண்டியூா் ஆகிய ஊா்களிலும் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

