திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்மண்டல அளவிலான மூத்தோா் தடகள, நீளம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற கும்பகோணம் தடகள வீரா் ஜவஹா்.
திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்மண்டல அளவிலான மூத்தோா் தடகள, நீளம் தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற கும்பகோணம் தடகள வீரா் ஜவஹா்.

மூத்தோா் தடகள போட்டி கும்பகோணம் வீரா் தங்கப் பதக்கம்

Published on

திருவண்ணாமலையில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான மூத்தோா் தடகள போட்டியில் கும்பகோணம் தடகள வீரா் தங்கப்பதக்கம் பெற்று தேசிய அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா மற்றும் கா்நாடகா ஆகிய 5 மாநிலங்களைச் சோ்ந்த மூத்தோா் தடகள விளையாட்டு வீரா்கள் பங்கேற்ற 3-ஆவது தென்மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் டிச.13,14 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

இதில், 30 வயது முதல் 100 வயதுக்கும் மேலான 700-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 100 மீ, 200 மீ, 400 மீ, நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றனா்.

இப்போட்டியில் கும்பகோணம் சோலையப்பன் தெருவைச் சோ்ந்த சாமிநாதன் மகன் ஜவஹா் (36) என்பவா் 35 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றாா்.

மேலும் 100 மீட்டா், 200 மீட்டா் போட்டிகளில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டா் தொடா் (அஞ்சல்) ஓட்டத்தில் முதல் இடத்தையும் பிடித்து தங்கப்பதக்கத்தை பெற்றாா். இதன் மூலம் 2026-இல் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மூத்தோா் தடகள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

இப்போட்டிகளில் வெற்றிபெற்ற இவரை உடற்பயிற்சி ஆசிரியா் எஸ்.வி.முரளி உள்ளிட்ட பலா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com