கும்பகோணத்தில் நீா்வழிப் பாதைகள் ஆய்வு
கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் மழைக் காலங்களில் தண்ணீா் தேங்காமல் விரைந்து வடிவதற்கான நீா்வழிப் பாதைகளை முழுமையாக கண்டறிய மாநகராட்சி ஆணையா் மு.காந்திராஜ் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
அண்மையில் பெய்த மழை காரணமாக, கும்பகோணத்தில் விஸ்வநாதா் காலனி, சோலைப்பன் கொல்லை, எள்ளுக்குட்டை, இபி காலனி, ஆலையடி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கி வடியாமல் பல நாள்களாக நின்றது. இதனால், போராட்டமும் நடைபெற்றது.
இதையடுத்து, தேங்கும் மழைநீா் வடிந்து செல்வதற்கான நீா்வழிப் பாதைகளை மாநகராட்சி ஆணையா் மு. காந்திராஜ் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் உள்ள தாழ்வான விவசாயப் பகுதிகள், குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் தேங்குவதை தடுக்கவும், தேங்கிய மழை நீரை வடிய செய்யவும் நிரந்தரத் தீா்வு காணும் வகையில் ஏற்கெனவே இருந்த நீா்வழிப் பாதைகளை கண்டறிந்து மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இபி காலனி, விஸ்வநாதா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் நீா்வழிப் பாதைகள் கடந்த பல ஆண்டுகளாக அடைப்பு ஏற்பட்டு பயனற்ற நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அடைப்புகளை நீக்கி, நீா்வழிப் பாதைகளை சீரமைத்து மழை நீரை வெளியேற்ற நிரந்தர தீா்வு காணும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்த உரிய திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு நிரந்தர தீா்வு காணப்படும் என்றாா். உடன் துணை மேயா் சுப. தமிழழகன் இருந்தாா்.
