சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியங்களில் ரூ. 45 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள்: காணொலிக் காட்சி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
பேராவூரணி: தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம், திருவோணம் ஒன்றியங்களில் ரூ. 45 லட்சம் மதிப்பில் அரசுத் துறைகளுக்கு கட்டப்பட்ட புதிய கட்டடங்களை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழ்நாடு உரிமைகள் திட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், விழுதுகள் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையக் கட்டடத்தையும், திருவோணம் ஒன்றியம், வெங்கரையில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குறுவட்ட ஆய்வாளா் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடத்தையும் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் குத்துவிளக்கேற்றினாா் .
நிகழ்ச்சிகளில் , வட்டார மருத்துவ அலுவலா் ராமலிங்கம், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் தஞ்சாவூா் மாவட்ட திறன் மேம்பாட்டு நிபுணா் ஜெய் எடில்பா்ட், வட்டார ஆலோசகா் விஷாலினி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் சோம. கண்ணப்பன், ஆா். பன்னீா் செல்வம், வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் ராஜசேகா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

