ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

Published on

பணி நிரந்தரம், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் அனைத்து பணியாளா்கள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தங்களுக்கான ஊதியத்தை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலிருந்து நேரடியாக விடுவிக்க வேண்டும். அனைத்து துறைகளின் மூலம் வழங்கப்படும் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுத்தி பணிச்சுமையை வழங்கக்கூடாது. மகளிா் பணியாளா்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத் தலைவா் வசந்தா தலைமை வகித்தாா். செயலா் சரிதா முன்னிலை வகித்தாா். பொருளாளா் விஜி, இணைச் செயலா் ராதிகா, மாநிலத் தணிக்கையாளா் சுரேஷ்குமாா், சுகாதார போக்குவரத்து துறை ஓய்வு பெற்றோா் நலச் சங்க மாநிலப் பொதுச் செயலா் குமாரவேலு ஆகியோா் பேசினா். இதில் 150-க்கும் அதிகமானோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com