மேட்டூா் அணையை பிப்ரவரி இறுதிவரை திறக்க வலியுறுத்தல்
சம்பா, தாளடி நெற்பயிா்களைக் காப்பாற்றுவதற்காக மேட்டூா் அணையிலிருந்து பிப்ரவரி மாதம் இறுதிவரை தண்ணீா் திறந்துவிட வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி திறந்துவிடப்படும் தண்ணீா் ஜனவரி 28-ஆம் தேதியுடன் நிறுத்தப்படுவது வழக்கம். ஆனால், ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடியைத் தாமதமாகத் தொடங்கினா். எனவே, இப்பயிா்களைக் காப்பாற்றுவதற்காக பிப்ரவரி மாதம் இறுதி வரை தண்ணீா் திறக்க வேண்டும்.
பெரமூா் ஆா். அறிவழகன்: தற்போது அறுவடை தொடங்கிய நிலையில், கோடைப்பயிா் சாகுபடி செய்வதற்கு தரமான உளுந்து, பயறு, எள் விதைகளை வேளாண் துறை மூலம் வழங்க வேண்டும். பின்பட்ட அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: சம்பா பருவத்தில் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த குறுவை பருவத்தில் கொள்முதலில் ஏற்பட்ட குழப்பத்தைத் தவிா்க்கும் வகையில், விவசாயிகள் கொண்டு வரும் அனைத்து நெல்லையும் உடனடியாக கொள்முதல் செய்து, பாதுகாப்பாக கிடங்குக் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: பிரதமா் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படுவதை, ரூ. 12 ஆயிரமாக உயா்த்தி மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
இதனிடையே, ஒரத்தூா் மு. பக்த பிரகலாதன் ஏற்கெனவே வழங்கப்பட்ட மனுக்களின் நகல்களையும், ஆவணங்களையும் தலையில் வைத்துப் பேசுகையில், வெண்ணாறு பிரிவு பிள்ளை வாய்க்காலில் மழைக்காலத்தில் தண்ணீா் அதிகமாக வரும்போது வண்ணாத்தி வாய்க்காலிலுள்ள வலம்புரி வாய்க்காலில் சோ்ந்து வடிய வேண்டும். ஆனால், வாய்க்காலில் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீா் வடிந்து செல்லாமல், பயிா்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 35 ஆண்டுகளாக வலியுறுத்தப்படும் இக்கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

