கல்லூரிகளில் பணியாற்றுவதற்குத் தகுதித் தேர்வாகக் கருதப்படும் தேசியத் தகுதித்தேர்வு (நெட்) திருச்சியில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,412 பேர் எழுதினர்.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகப் பணியாற்றுவதற்குத் தகுதியாகக் கருதப்படும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வை பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சார்பில் தமிழகத்தில் சென்னை, மதுரை,கோவை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மண்டலங்களில் நடத்தப்பட்டது.
திருச்சி மண்டலத்துக்குள்பட்டோருக்கு திருச்சி மற்றும் ஸ்ரீரங்கத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேர்வு நடத்தப்பட்டது. திருவானைக்கா அகிலாண்டேசுவரி வித்யாலயத்தில் 780 பேர், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600 பேர், தென்னூர் மகாத்மாகாந்தி நூற்றாண்டு நினைவு வித்யாலயத்தில் 452 பேர், தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் 480 பேர், வயலூர் சாலை காவேரி குளோபல் பள்ளியில் 480 பேர், ஸ்ரீரங்கம் மேலூர் சாலை வாகீச வித்யாஸ்ரத்தில் 480 பேர், திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரியில் 600 பேர், திருச்சி கமலா நிகேதன் பள்ளியில் 540 பேர் என 4,412 பேர் இத்தேர்வை எழுதினர்.
காலை 9.30 முதல் 10.30 மணி வரை முதல் தாளும், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 2-ஆவது தாளுக்கும் தேர்வு நடைபெற்றது. தேர்வாளர்கள் காலை 7 மணிக்கே வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
ஒரு நிமிஷ தாமதத்தால் அனுமதி மறுப்பு: ஸ்ரீரங்கம் மேலூர் சாலையிலுள்ள வாகீச வித்யாஸ்ரம் பள்ளியில் தேர்வெழுத வந்த பலர் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் தேர்வு மையத்தை கண்டுபிடித்து வருவதில் சிரமம் ஏற்பட்டதாம். போதிய பேருந்து வசதிகளும் இல்லையாம்.
ஒரு நிமிஷம் தாமதமாக வந்த பலர் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வாளர்கள் விளக்கம் கூறியும் அனுமதிக்க மறுத்ததால் அவர்கள் தேர்வெழுத முடியாமல் பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். "நான் தேர்வெழுத இந்தப் பள்ளிக்கு வருவதற்கு 4 பேருந்துகளில் மாறி மாறி வந்தேன். ஆனால், தேர்வு மையத்துக்குச் செல்ல பேருந்து வசதி இல்லாததால் நடந்தே சென்றேன். இதனால் தாமதம் ஏற்பட்டதால் தேர்வெழுத முடியாமல் பாதிக்கப்பட்டேன் என்றார் மன்னார்குடியைச் சேர்ந்த பொன்னீலன்.
2,3 ஆவது தளங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வு அறை: இத்தேர்வை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு 2 மற்றும் 3 ஆவது தளங்களில் தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டதால் அவர்கள் பெரும் சிக்கலைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தும் மாற்றுத் திறனாளிகளை வேண்டுமென்றே அலைக்கழிக்கும் செயலை பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவினரோ, அல்லது தேர்வை நடத்தும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகமோ செய்திருக்கிறது. மாற்றுத் திறனாளிகள் தேர்வு மையத்துக்கு வருவதற்கே போராட்டமாக உள்ளது. அதற்கு மேல் இப்படி அலைக்கழிக்கலாமா என்கிறார் நெட் தேர்வை திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் எழுதிய மாற்றுத் திறனாளி காமராஜ்.