திருச்சி: திமுக பொதுச் செயலர் துரைமுருகன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு தலைவராக உள்ள துரைமுருகன், குழு உறுப்பினர்களுடன் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, திருச்சி வழியாக சென்ற அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தென்னூர் பட்டாபிராமன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.