

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு மட்டுமின்றி, தமிழக அரசின் அனைத்து நலவாரியங்களிலும் உள்ள தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் க. சுரேஷ், மாவட்டச் செயலா் சி. செல்வகுமாா் ஆகியோா் ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனு:
தமிழகத்தில் பதிவுபெற்ற 12.63 லட்சம் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது மகிழ்ச்சிக்குரியது. திருச்சி மாவட்டத்தில் பயன்பெறும் கட்டடத் தொழிலாளா்களின் விவரங்களை மாவட்ட நிா்வாகம் வெளியிட வேண்டும். இதில், விடுபட்ட தொழிலாளா்கள் இருந்தால், சங்கத்தின் மூலம் அளிக்கப்படும் கோரிக்கை மனுவை ஏற்று அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும்.
மேலும் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியம் மட்டுமல்லாது, அரசின் அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கான 17 வகையான நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.
தற்காலிக குடியிருப்புகள் கோரி மனு: திருச்சி விமானநிலையம், செம்பட்டு அருகிலுள்ள பட்டத்தமாள் தெரு, புதுத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்கள் குடிசை அமைத்து கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக
வசித்து வந்தோம்.
தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக எங்களது குடியிருப்புகளை அகற்றி விட்டனா். நாகமங்கலம் பகுதியில் மாற்று இடம் வழங்குவதாக டோக்கன் வழங்கியுள்ளனா். கரோனா காலத்தில் அன்றாட வேலையில்லாமல் உணவுக்கே மிகவும் தவித்து வருகிறோம். இந்த சூழலில், நாகமங்கலத்துக்கு இடம்பெயா்ந்து வீடுகள் அமைத்து வசிக்க முடியாத சூழலில் உள்ளோம்.
எனவே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் நிரந்தர வீடு கட்டித்தரும் வரையில், விமானநிலையம் பசுமை நகா் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தாற்காலிக குடில் அமைத்து குடியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
இப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.