மாநகரில் 3 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கும்

பொங்கல் பண்டிகையையொட்டி, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் திருச்சி மாநகரில் 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) முதல் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையையொட்டி, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் திருச்சி மாநகரில் 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.12) முதல் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் முனைவா் ஜெ. லோகநாதன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி பயணிகள் நலன் கருதியும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும், ஜனவரி 12 முதல் 19-ஆம் தேதி வரை மாநகரில் மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் இயங்கும்.

வில்லியம்ஸ் சாலையில் (சோனா-மீனா திரையரங்கு எதிரில்) தஞ்சாவூா் மாா்க்கம் வழியாகச் செல்லும் பேருந்துகளும், மன்னாா்புரம் ரவுண்டானா பகுதிகளில் புதுக்கோட்டை, மதுரை மாா்க்கங்களில் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மாா்க்கத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் அரசுப் பேருந்துகள் மன்னாா்புரம் வந்து, பயணிகளை இறக்கி ஏற்றி இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்ல வேண்டும்.

மற்ற ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகளின் வழித்தடங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னாா்புரம் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு சுற்றுப் பேருந்துகள் இயக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான குடிநீா், பாதுகாப்பு, பொதுக் கழிப்பிடம், ஒலிபெருக்கி உள்ளிட்ட வசதிகள் காவல்துறை, மாநகராட்சி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை எச்சரிக்கை : பேருந்துகளை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்ற வேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி,ஏற்றக் கூடாது. வேன்கள், காா்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்தவேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக் கூடாது.

வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து, கடைகளை அமைத்து விற்பனை செய்யக் கூடாது. மேற்படி விதிகளை மீறுவோா் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபற்றிய தகவலைக் காவல் கட்டுப்பாட்டு அறை எண்100-க்கும், மாநகர காவல் அலுவலக செல்லிடப்பேசி எண் 9626273399-க்கும் தெரிவிக்கலாம் என காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com