திமுகவிடம் தங்களுக்கு கேட்ட வார்டுகள் ஒதுக்கப்படாததால் அதிருப்தியடைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியானது திருச்சி மாநகராட்சியில் தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளது.
திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ளன. இதில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியானது, தங்களுக்கு 30ஆவது வார்டு (பாலக்கரை), 47ஆவது வார்டு (சுப்பிரமணியபுரம்) ஆகியவற்றை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது.
இதையும் படிக்க | வெளியானது சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' தீம் பாடல்
கலைஞர் அறிவாலயத்தில் இருகட்டமாக நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. முஸ்லிம் லீக் கட்சிக்கு பீமநகர் 52ஆவது வார்டு (பெண்) ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு முஸ்லிம் லீக் கட்சியினர் ஒத்துக் கொள்ளவில்லை.
இதையடுத்து, அக்கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.
இதையும் படிக்க | உணவுக்கு உத்தரவாதமற்ற 81 கோடி பேர்: அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை
இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் வி.எம். பாரூக், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி உமர் பாரூக், மாநில எம்.எஸ்.எப். பொதுச் செயலாளர் அன்சர் அலி, தெற்கு மாவட்ட பொருளாளர் பி.எம்.ஹூமாயூன், தெற்கு யூத் லீக் மாவட்ட தலைவர் அஜிம், தெற்கு யூத் லீக் மாவட்ட செயலாளர் சையது ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
திருச்சி மாநகராட்சியில் திமுக தலைமையிலான கூட்டணியில் இரண்டு வார்டுகள் கேட்டு, பல முறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால், கேட்ட வார்டுகள் திமுக தரப்பில் கொடுக்கப்படவில்லை.
இதையும் படிக்க | நடிகர் அஜித்தின் அடுத்த படத்தில் மோகன்லால் மற்றும் நாகர்ஜுனா ?
எனவே, வருகிற திருச்சி மாநகராட்சி தேர்தலில் எந்தவித உடன்பாடுகள் ஏற்படவில்லை. இதன் காரணமாக, திருச்சி மாநகராட்சிக்கான தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.