உலகின் மொத்த மக்கள்தொகையில் 81 கோடி பேர் இரவு உணவின்றி உறங்கச் செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டை விட 16 கோடி அதிகமாகும்.
ஐக்கிய நாடுகள் அவையின் உலகளாவிய மனிதவள ஆய்வு 2022 அறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது. கரோனா தொற்று பேரிடர், அதீத பருவநிலை மாற்றம், இயற்கை காரணிகள் உள்ளிட்டவைகளால் மனித வாழ்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த இந்த ஆய்வு பல அதிர்ச்சிகர செய்திகளை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க | கரோனா பேரிடர்: செல்வ குவிப்பு ஒருபுறம், வறுமை பலி மறுபுறம்
அதன்படி உலகளவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 81.1 கோடியாக அதிகரித்துள்ளது. உணவுத் தேவை, இருப்பு, விநியோகம் மற்றும் பற்றாக்குறை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் உலகளவில் உணவு பாதுகாப்பு மோசமான நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள்தொகையான 4 கோடி பேரில் 3.7 கோடி பேர் உணவு பற்றாக்குறையால் தவித்து வருவதாகவும், 5ல் 3 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | பசியில் வாடும் ஏமன்: நிதியுதவியை குறைக்கும் ஐநா
அதேபோல் சிரியாவில் மொத்த மக்கள் தொகையான 2 கோடி பேரில் 1.24 கோடி பேர் அடுத்தவேளை உணவுக்கு உத்தரவாதமற்ற சூழலில் வாழ்ந்து வருவதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இவைகளைப் போலவே காங்கோ குடியரசு, தெற்கு சூடான், சோமாலியா உள்ளிட்ட நாடுகளின் மக்கள் போதிய உணவின்றி தவித்து வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.