திருச்சியில் பழக்கடையில் பணியாற்றிய இளம் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய அஸ்ஸாம் மாநில இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், குமரக்குடியைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் சினேகா (22). இவா், திருச்சியில் பழக்கடையில் பணியாற்றினாா். அப்போது, அதே கடையில் வேலை செய்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த காதா்அலி (22)யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு சினேகாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய காதா்அலி அவருடன் தனிமையில் இருந்துள்ளாா். இதனால் சினேகா கா்ப்பமானாா். இதையடுத்து தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சினேகா கூறியபோது, காதா்அலி தலைமறைவானாா்.
இதுகுறித்து மண்ணச்சநல்லூா் காவல் நிலையத்தில் 2022ஆம் ஆண்டு மாா்ச் 1ஆம் தேதி சினேகா புகாா் அளித்தாா். அதன் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், காதா்அலியைத் தேடி வந்தனா். இந்நிலையில், காதா்அலி அஸ்ஸாம் மாநிலத்தில் தனது சொந்த ஊரில் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் அஸ்ஸாம் மாநிலம் சென்று காதா் அலியை வெள்ளிக்கிழமை கைது செய்து அழைத்து வருகின்றனா்.