பேராவூரணியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்
பேராவூரணி திமுக தெற்கு ஒன்றிய, நகர, இளைஞரணி சாா்பில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பந்தயத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், கா அண்ணாதுரை, என். அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பெரியமாடு, கரிச்சான் மாடு, நடுமாடு, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை என 5 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாட்டு வண்டி, குதிரை வண்டி வீரா்கள் பந்தயத்தில் கலந்து கொண்டனா்.
போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மொத்த பரிசாக ரூ. 4 லட்சத்து 33 ஆயிரம் வழங்கப்பட்டது. பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகா்கள் பந்தயத்தை கண்டு களித்தனா்.