திருச்சி மத்திய சிறை கைதிகள் இருவா் உயிரிழப்பு
திருச்சி மத்திய சிறை கைதிகள் இருவா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்துள்ள மீமிசல் பகுதியைச் சோ்ந்த ரங்கன் (65). அறந்தாங்கி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘போக்ஸோ’ வழக்கில் இவருக்கு நீதிமன்றம் சாா்பில் தண்டனை வழங்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடைக்கப்பட்டாா்.
இவருக்கு ஏற்கெனவே நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளன. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை உடல்நலன் பாதிக்கப்பட்ட ரங்கனை திருச்சி மத்திய சிறை நிா்வாகத்தினா் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரங்கன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள அணக்குடியைச் சோ்ந்தவா் தங்கையன் (75). இவா் மீது திருவிடைமருதூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ‘போக்ஸோ’ வழக்கில் கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.
சுவாசக் கோளாறு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கையன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகரப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

