வேலூர், அக். 7: வேலூரில் 128 சிம்கார்டுகள் பெற்று ரூ.2.08 கோடிக்கு மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் மீது உள்ளூர் போலீஸில் புகார் செய்துள்ள பிஎஸ்என்எல் நிர்வாகம், தற்போது வேறு விசாரணை நிறுவனத்தை நாடியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மோசடி வழக்குக்கான உரிய ஆதாரங்களைத் தற்போது வரை உள்ளூர் போலீஸôரிடம் சமர்ப்பிக்காமல் இருப்பதும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.
வேலூர் சங்கரன்பாளையம் ஆர்பிஎம் தெருவில் முருகன் காம்ப்ளக்ஸ் கட்டடத்தில் செயல்படும் பிரபல ஹெர்பல் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் சிஎச்.ரமேஷ் என்று சொல்லிக்கொண்ட நபர், சிம்கார்டுகள் கேட்டு வேலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தை அணுகியுள்ளார். சென்னை ஹபிபுல்லா சாலையில் தலைமை அலுவலகம் இருப்பதாகக் கூறி, அதன் பொதுமேலாளர் ஜி.தினேஷ்குமார் என்பவரின் கடிதத்தையும் அளித்துள்ளார்.
சிம்கார்டுகள் வாங்கத் தேவைப்படும் நிறுவன அடையாளச் சான்று, பான் கார்டு எண், மதிப்புக்கூட்டு வரி எண், அலுவலகக் கட்டடத்தின் உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சான்று என பிஎஸ்என்எல் தரப்பில் கேட்கப்பட்ட சான்றுகளை அளித்து, அவர் ஜூலை 29-ம் தேதி 68 சிம்கார்டுகளும், ஆகஸ்ட் 3-ம் தேதி 60 சிம்கார்டுகளும் பெற்றுள்ளார். இவற்றுக்கு மொத்தம் ரூ.1.20 லட்சம் வைப்புத்தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் 60 சிம்கார்டுகள் ஐஎஸ்டி இணைப்பு பெற்றவை. இவற்றின் மூலம் வெளிநாடுகளுக்குப் பேச முடியும். இந்த 60 சிம்கார்டுகளுக்கு இந்தியாவுக்குள் எந்த இடத்திலிருந்தும் பேசும் வகையில் ரோமிங் வசதியும் உண்டு. மேலும், 128 சிம்கார்டுகளும் சியுஜி (அவற்றுக்குள் பேசினால் இலவசம்) வசதி பெற்றவை.
இணைப்பு பெற்ற ஜூலை 29-ம் தேதி முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை இந்த 60 ஐஎஸ்டி மற்றும் இதர 68 சிம்கார்டுகள் என 128 சிம்கார்டுகளின் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.1.97 கோடியை நெருங்கியது. தற்போது ரோமிங் கட்டணத்தோடு ரூ.2.08 கோடியை எட்டியுள்ளது.
அனுப்பப்பட்ட பில்கள் அனைத்தும் முகவரியில் நபர்கள் இல்லை எனத் திரும்பியது. நேரில் சென்று விசாரித்தபோது, முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே கிடையாது என்பதும் தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து கடந்த 29-ம் தேதி, வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ந.அறிவுச்செல்வத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று பிஎஸ்என்எல் பொதுமேலாளர் ஏ.ஷாஜகான் தினமணி செய்தியாளரிடம் புதன்கிழமை தெரிவித்தார்.
"இதைப் பொருளாதார மோசடியாகவே பிஎஸ்என்எல் கருதுகிறது. தனியார் நிறுவனம் பணம் கட்டாமல் தலைமறைவாகிவிட்டது. அந் நிறுவனத்தினரைக் கண்டறிந்து, பணத்தை எப்படி வசூலிப்பது என்பதில் பிஎஸ்என்எல் கவனம் செலுத்துகிறது. சிம்கார்டுகள் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டன? என்பது குறித்து போலீஸôர் விசாரிக்க வேண்டும்' என்றும் ஷாஜகான் தெரிவித்தார்.
இந் நிலையில், இப் புகார் குறித்து மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸôர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த சிம்கார்டுகளைப் பயன்படுத்தி எந்தெந்த நாடுகளுக்குப் பேசப்பட்டது? ரோமிங் கட்டணம் வந்திருப்பதால் நாட்டில் எந்தெந்த மாநிலங்களுக்கு இந்த சிம்கார்டு கொண்டு செல்லப்பட்டது? என்ற பட்டியலை இதுவரை போலீஸôருக்கு பிஎஸ்என்எல் நிர்வாகத்தினர் அளிக்கவில்லை.
இருப்பினும், தலைமறைவாக உள்ள ரமேஷ், தினேஷ்குமார் ஆகியோரைத் தேடும் பணியை மட்டுமே போலீஸôர் மேற்கொண்டுள்ளனர் என்பதை காவல் கண்காணிப்பாளர் ந.அறிவுச்செல்வம் உறுதி செய்துள்ளார்.
போலீஸôரிடம் புகார் செய்துவிட்டு, இதுவரை சிம்கார்டு பயன்பாட்டுப் பட்டியலை அளிக்காதது ஏன்? பொருளாதார மோசடியாக கருதும் பிஎஸ்என்எல், இவ்வழக்கை சிபிஐ போன்ற வேறு ஒரு விசாரணை நிறுவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது ஏன்? போன்ற கேள்விகளுக்கு பொதுமேலாளர் ஏ.ஷாஜகான் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதுதவிர, பொதுமேலாளர் அலுவலகத்துக்குப் பின்னால் உள்ள தெருவில் அலுவலகம் இருப்பதாகக் கூறியிருக்கும் அந்த நிறுவனத்தின் முகவரியில் தற்போதுதான் கட்டடமே கட்டப்படுகிறது. இதை அலுவலர்கள் சரிபார்க்காதது ஏன்? என்பது குறித்தும் மோசடி குறித்து பிஎஸ்என்எல் தரப்பில் போலீஸôரிடம் புகார் செய்த, இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும் பிஎஸ்என்எல் தரப்பில் பதில் இல்லை.
மேலும், வேறு ஒரு விசாரணை நிறுவனத்தை பொதுமேலாளர் ஷாஜகான் நாடியிருப்பது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இம் மோசடியில் தொடர்புடைய நபர்கள், சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்ட இடங்கள் என 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பட்டியல் சிபிஐ வசம் ஒப்படைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம், நாட்டின் இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் கும்பல்களின் பின்னணி இதில் இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

