ஆரணி, டிச.12: ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி நூற்றாண்டு விழாவை பள்ளி மாணவ, மாணவிகள் குத்துவிளக்கு ஏற்றி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி கடந்த 12-12-1911-ல் தொடங்கப்பட்டது. அப்போது இப்பள்ளி கார்னேஷன் இலவச ஆரம்பப்பள்ளி என செயல்பட்டது. 1942-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியானது. 1946-ம் ஆண்டு இஎஸ்எஸ்எல்சி தேர்வு எழுதப்பட்டது. 1949-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது இப்பள்ளியை டவுன் ஹைஸ்கூல் என்று அழைத்தனர்.
1952-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி (11-ம் வகுப்பு) தேர்வு நடைபெற்றது. 1978-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியானது. இப்பள்ளிக்கு 1959-ம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த காமராஜர், சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி என்று பெயர் வைத்தார்.
ஆரணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ஏ.சி.நரசிம்மன், ஏ.சி.சண்முகம், மு.சின்னக்குழந்தை, ஏ.சி.தயாளன், டி.பி.ஜே.ராஜாபாபு ஆகியோரும் இப்பள்ளியில் பயின்றவர்கள்தான் என ஏ.சி.நரசிம்மன் தெரிவித்தார்.
நூற்றாண்டு விழாவில் பேசிய பள்ளி தாளாளர் வி.டி.எஸ்.சுந்தரம், குப்புசாமி பாடசாலையாக இருந்தது, 1911-ம் ஆண்டு 150 மாணவர்களுடன் கார்னேஷன் இலவச பள்ளியாக மாறியது. அப்போது தலைமை ஆசிரியரின் சம்பளம் ரூ. 10. ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். இப்பள்ளிக்கு ஜாகீர் திருமலை சாஹிப் அதிக நிதி உதவி செய்துள்ளார் என்றார்.
பின்னர் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் நிர்வாகக் குழுத்தலைவர் எம்.அமிர்தராஜ், பொருளாளர் ஆர்.வி.கே.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகக் குழுவினர் ஆர்.என்.சாமி, பி.டி.எஸ்.ஜோதிசெல்வராஜ், தலைமையாசிரியர் ஜி.விஸ்வநாதன், கார்னேஷன் பள்ளிதலைமையாசிரியர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.