காவலூர் தொலைநோக்கி மையம்: பார்வைக்கு ஒருநாள் மட்டுமே!

வேலூர், மார்ச் 2: காவலூர் தொலைநோக்கி மையத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், வாரத்தின் மற்றநாள்களில் வருவோர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். ஆசியாவிலேயே
Updated on
1 min read

வேலூர், மார்ச் 2: காவலூர் தொலைநோக்கி மையத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இதனால், வாரத்தின் மற்றநாள்களில் வருவோர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலைநோக்கி: ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள காவலூர், வேலூர்- திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ளது. இங்கு ஆசியாவிலேயே பெரிய தொலைநோக்கியான வைனுபாப்பு உள்ளது. இதே அளவில் சீனாவிலும் ஒரு தொலைநோக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

1986-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது இந்தத் தொலைநோக்கி.

பூமத்திய ரேகைப் பகுதியில் இந்த இடம் இருப்பதாலும், ஆண்டில் 5 முதல் 6 மாதங்கள்வரை இப்பகுதியில் வானம் தெளிவாக காணப்படுவதாலும் தொலைநோக்கி வைப்பதற்கு இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இங்கு பல்வேறு அளவுகளில் வெவ்வேறு இடங்களில் 9 தொலைநோக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. வானில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து தினமும் வானியல் அறிஞர்களால் ஆய்வு செய்யப்படுகிறது.

இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்வையாளர்களாக வந்தாலும் சனிக்கிழமை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

அன்றைய தினம் மாலை 6.30 மணிமுதல் இரவு 10 மணிவரை சிறிய அளவிலான தொலைநோக்கிகள் மூலம் விண்மீன்கள் மற்றும் கோள்கள் காண்பிக்கப்படுகின்றன.

தொலைநோக்கியின் செயல்பாடு குறித்தும் விளக்கப்படுகிறது. மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஆனால், வாரத்தின் மற்ற நாள்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த தொலைநோக்கியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

தொடர்ந்து, இந்தத் தொலைநோக்கி தொடங்கப்பட்ட சில ஆண்டுகள்வரை வார நாள்கள் முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல இப்போதும் சனிக்கிழமை மட்டுமல்லாமல் வார நாள்கள் முழுவதும் அனுமதி அளிக்கவேண்டும் என்றே சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

பேருந்து வசதி:

பகல் நேரங்களில் காவலூரிலிருந்து ஆலங்காயம், ஜமுனாமரத்தூருக்கு அவ்வப்போது பேருந்து வசதி இருந்தபோதும் இரவில் மிகமிக குறைந்த அளவிலேயே பேருந்து வசதி உள்ளது.

எனவே, இரவு நேரங்களில் 10 மணிவரை ஆலங்காயம் வழியாக வாணியம்பாடிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கினால் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com