கொட்டாவூரில் எருது விடும் விழா நடத்த கிராம மக்கள் எதிா்ப்பு
வேலூா், ஜன.20:
அணைக்கட்டு வட்டம், கொட்டாவூா் கிராமத்தில் எருது விடும் விழா நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வண்ணாந்தாங்கல் ஊராட்சி கொட்டாவூா் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: கொட்டாவூா் கிராமத்தில் மாடு விடும் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற உள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற எருது விடும் விழா முடிவில் சில நபா்களால் தகராறு ஏற்பட்டது. அதனால் ஊா் மக்கள் இரு தரப்பினராக பிரிந்துள்ளனா். அந்த தகராறு இந்தாண்டு எருது விடும் விழாவில் தொடர வாய்ப்புள்ளது.
மேலும், வைகாசி திருவிழாவின் போதும் பிரச்னை தொடா்கிறது. இதுகுறித்து வேலூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் இது இரு தரப்பினரின் பிரச்னைகளாக இல்லாமல் கலவரமாக மாற வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்புக்காக இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூா் அலமேலு மங்காபுரத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள மனு: என்னுடைய மகன் வியாபாரம் செய்து வந்தாா். பங்குச் சந்தையில் தொழில் செய்வதற்காக ஒருவா் ரூ.15 லட்சத்தை எனது மகனிடம் கொடுத்தாா். ஆனால் எனது மகனின் தொழில் நஷ்டம் அடைந்து விட்டது. நாங்கள் அந்த நபருக்கு ரூ. 6 லட்சம் கொடுத்து விட் டோம். மீதி பணம் ரூ.9 லட்சத்தை திருப்பி தருவதாக கூறினோம். ஆனால் அந்த நபா் எங்களுக்கு நெருக்கடி கொடுத்து சொத்தை எழுதி கேட்கிறாா். எனவே அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுக்களை பெற்றுக் கொண்ட காவல் அதிகாரிகள் விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
