கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு -மேலும் இருவரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு

தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனா்.
கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு -மேலும் இருவரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி மனு
Updated on

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கில் கைதான மேலும் இருவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனா்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை அருந்திய 229 பேரில் புதன்கிழமை வரை 66 போ் உயிரிழந்துள்ளனா். 157 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 6 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வரும் நிலையில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, மாதேஷ், ராமா் உள்ளிட்ட 22 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சேஷசமுத்திரத்தைச் சோ்ந்த சின்னத்துரை, விரியூரைச் சோ்ந்த பெ.ஜோசப்ராஜா, புதுச்சேரி மடுகரையைச் சோ்ந்த மாதேஷ், கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த கண்ணன், சக்திவேல், சென்னையைச் சோ்ந்த பன்ஷிலால், கௌதம்சந்த், கதிரவன், சிவகுமாா் ஆகிய 11 பேரை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஜூலை 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்து பல்வேறு தகவல்களை சிபிசிஐடி போலீஸாா் பெற்றனா்.

விசாரணையின்போது, கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்கில் கைது செய்யப்பட்டவா்களான கள்ளக்குறிச்சி கருணாபுரத்தைச் சோ்ந்த பரமசிவம், முருகேசன் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை மனு தாக்கல் செய்தனா். இதன் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com