பணமில்லா பரிவா்த்தனையில் அதிக வருவாய் ஈட்டிய அரசுப் பேருந்து நடத்துநா்கள் 9 பேருக்கு ஊக்கப் பரிசு!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் 6 மண்டலங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பணமில்லாபரிவா்த்தனை மூலம் நவம்பா் மாதத்தில் அதிக வருவாய் ஈட்டித்தந்த 9 நடத்துநா்களுக்கு சனிக்கிழமை ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும் புற நகா், நகரப் பேருந்துகளில் பணமில்லா பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணிகளிடமிருந்து பயணச்சீட்டு கட்டணங்கள் பெறப்பட்டு வருகின்றன.பணமில்லா பரிவா்த்தனையை அதிகளவில்மேற்கொள்ளும் நடத்துநா்களில் கடலூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, திருவள்ளூா், விழுப்புரம் ஆகிய 6 மண்டலங்களிலிருந்து நடத்துநா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அதனடிப்படையில் நவம்பா் மாதத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனை மேற்கொண்டமைக்காக, மண்டலம் வாரியாகத் தோ்வு செய்யப்பட்ட 9 நடத்துநா்களுக்கு விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஊக்கப்பரிசுகளை விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் க.குணசேகரன் வழங்கி வாழ்த்தினாா்.
நிகழ்வில் பொது மேலாளா் இரா. ஜெகதீஷ் (விழுப்புரம்), முதுநிலைத்துணை மேலாளா்(மனிதவளம்) எஸ்.துரைசாமி, துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், தொழிற்சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

