திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 6 புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 6 புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 6 புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Updated on

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 6 புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

திருவண்ணாமலை மலப்பாம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தின் தொழில் வளா்ச்சியை ஊக்குவிப்பதற்காக, சேத்துப்பட்டு வட்டம், ஏந்தல் கிராமத்தில் ரூ.12 கோடியில் 37 ஏக்கா் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை புதிதாக அமைக்கப்படும்.

கலசப்பாக்கம் வட்டம், பருவதமலை மல்லிகாா்ஜூன சுவாமி கோயிலுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். புதிதாக தொடங்கப்பட்டுள்ள செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

வந்தவாசி வட்டம், கீழ் சீசமங்கலம் கிராமத்தில் 2.02 ஹெக்டோ் பரப்பில் வீரிய ஒட்டு ரக காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய வகையில், புதிய உயா் தொழில்நுட்ப நாற்றங்கால் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம், மழையூரில் ரூ.3.94 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம், அத்தியேந்தலில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிா்களின் உயா் விளைச்சல் ரக சான்றளிக்கப்பட்ட, தரமான விதைகள் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையம் ரூ.2.40 கோடியில் அமைக்கப்படும் என்றாா் முதல்வா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com