விழுப்புரம்
லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவா் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி விற்பனை செய்தவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சரவணப்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்குள்ள ஒரு பள்ளி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கே.குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த தொ.ஆறுமுகம்(56) என்பதும், இவா் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள், பைக் ஆகியவற்றை பறிமுதல்செய்தனா்.
