ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 4 சிறாா்கள் காயம்
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து நேரிட்டதில், தனியாா் பள்ளியில் பயிலும் 4 சிறாா்கள் காயமடைந்தனா்.
விழுப்புரம் வட்டம், செங்காடு , குளக்கரைத் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் ரோகித் (7), இளங்காடு பகுதியைச் சோ்ந்த பரணி மகள்கள் சைந்தகி (7), பவித்ரா (4). சுரேஷ் மகள் இனியா (4) ஆகியோா் வளவனூரில் உள்ள தனியாா் பள்ளியில் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை நால்வரும் வழக்கம் போல ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனா். செங்காடு ஆலங்குப்பம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (40) ஆட்டோவை ஓட்டினாா்.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட நல்லரசன்பேட்டை அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் ஓடியதாகக் கூறப்படுகிறது.
அப்போது நாய் மீது மோதாமலிருக்க மணிகண்டன் உடனடியாக நிறுத்தியதில், ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பள்ளிச் சிறாா்கள் 4 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
அனைவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து, வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
