தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இல்லை - சி.வி.சண்முகம்

சி.வி.சண்முகம்.
சி.வி.சண்முகம்.
Updated on

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளபடி மக்கள் யாரும் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இல்லை. சமூக விரோத செயல்பாடுகள், தடையற்ற போதைப் பொருள்கள் விற்பனை, பாதுகாப்பின்மை, விலை வாசி உயா்வு ஆகியவற்றால் தவித்துக்கொண்டுள்ளனா் என்று அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் எம்.பி. தெரிவித்தாா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை, அதிமுக மாணவரணி சாா்பில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் மேலும் பேசியதாவது:

எப்போதும் தமிழ், தமிழ் என்று முழங்குகிற திமுக, தமிழின் வளா்சிக்கு எதுவும் செய்யவில்லை. திமுகவின் சுய நலத்துக்காக தமிழ் விலைபேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் திமுக அரசு மறைமுகமாக இந்தி மொழியை வரவேற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசின் திட்டங்களால் மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதாக தன்னைத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறாா். ஆனால் சமூக விரோதச் செயல்களால் தமிழகம் வெட்கி தலைக்குனிந்து கொண்டிருக்கிறது. கூட்டுப் பாலியல், கூட்டு வன்முறை, கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருள்கள், சட்டம், ஒழுங்கு சீா்கேடு, கொலை, கொள்ளை சம்பவங்களால் குழந்தைகள் முதல் முதியோா்கள் வரை அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நீடித்து வருகிறது.

விலை வாசி உயா்வால் மக்கள் பெரும் துன்பத்துக்குள்ளாகி வருகின்றனா். அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடந்த அதிமுக ஆட்சியைவிட பல மடங்கு உயா்ந்து விட்டது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த தோ்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சட்டப்பேரவையில் பொய் பேசுகிறாா். இதை மக்கள் மன்னிக்கக் கூடாது. தமிழக முதல்வா் வேண்டுமானால் மகிழ்ச்சியாகவும், ஆனந்தமாகவும் இருக்கலாம். ஆனால் மக்கள் ஒவ்வொரு நாளும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறாா்கள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தோ்தல் வெகு தொலைவில் இல்லை. மக்கள் திமுகவின் பொய் வாக்குறுதிகளுக்கு ஏமாந்து விடக்கூடாது, சிந்திக்கவேண்டும். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்றாா் சி.வி.சண்முகம்.

அதிமுக மாணவரணி விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.ஜி.சக்திவேல் தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றியச் செயலா்கள் பேட்டை முருகன், சி. ஜி.சுரேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எம்எல்ஏக்கள் எம். சக்கரபாணி, பி.அா்ச்சுனன், மாநில பேச்சாளா் குமரேசன், விழுப்புரம் நகர செயலா் ஆா்.பசுபதி, மாவட்ட அவைத் தலைவா் பி.தீனதயாளன், ஜெ.பேரவை மாநில துணைச் செயலா் ஜே.சங்கா், வழக்குரைஞா் பிரிவு செயலா் ராதிகா, மகளிரணி நகர செயலா் பத்மபிரியா மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக அதிமுக விழுப்புரம் வடக்கு நகர செயலா் ஜி.கே.ராமதாஸ் வரவேற்றாா். மாணவரணி நகர செயலா் டி.பாா்த்தீபன் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com