குடலிறக்க பாதிப்புக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் அதிநவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக, குடலிறக்க நோய் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆர்.சுதாகர் கூறினார்.
குடலிறக்கம் (ஹெர்னியா) என்பது ஓர் உறுப்பு அல்லது திசுவால் உருவாக்கப்படும் ஒரு புடைப்பு. இந்தப் புடைப்பானது பொதுவாக அது இருக்கும் உடல் பாகத்தின் பலவீனமான பகுதியினூடாகத் தள்ளுகிறது.
இதனால், நாளடைவில் வீக்கம், வலி ஆகியவை ஏற்படுவதோடு, சில சமயங்களில் திறந்த வால்வுக்குள் குடல் சிக்கிக்கொள்ளும்போது வேறு பல பிரச்னைகளும் ஏற்படலாம்.
குடலிறக்கத்துக்கு அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதில், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை தற்போது அதிநவீன சிகிச்சையை அளித்து வருவதாக குடலிறக்க நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஆர்.சுதாகர் கூறினார். அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: குடலிறக்கப் பிரச்னைக்கு திறந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.
அதன்பின்னர் லேப்ராஸ்கோபி மூலமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது.
அடுத்தகட்டமாக இந்த அறுவைச் சிகிச்சையானது டிஇபி மெத்தட் (Total Extraperitoneal Patch Plasty (TEP) என்ற நிலையை எட்டியுள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையானது வயிற்றில் துளையிட்டு அதன் மூலமாக குடலிறக்கத்தை கட்டி வைப்பதாகும். மிகப் பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் இந்த சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகிறது.
ஆனால், கடலூர் அரசு மருத்துவமனையில் அம்மா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சையை அளித்து வருகிறோம். இதுவரை இந்த சிகிச்சை முறையில் கடந்த 3 மாதங்களில்
8 பேருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இது மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படாத சிகிச்சை முறையாகும் என்றார் அவர்.அப்போது, மருத்துவமனை இணை இயக்குநர் வசந்தி, கண்காணிப்பாளர் ஹபீசா, மயக்க மருந்து நிபுணர் சி.நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.