சிதம்பரம் நாகச்சேரி குளத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
சிதம்பரம் நகரில் உள்ள குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை தூர்வார வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து முதல் கட்டமாக, சிதம்பரம் நடராஜர் கோயில் தெப்பக்குளமான ஞானப்பிரகாசர் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 52 வீடுகள் அண்மையில் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக சிதம்பரம் நாகச்சேரி குளத்தை சுற்றிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 73 வீடுகள், விநாயகர் கோயில் ஆகியவை நகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறையினர் சார்பில் சனிக்கிழமை அகற்றப்பட்டன.
நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, வட்டாட்சியர் ஹரிதாஸ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.