பாலியல் குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 04th August 2019 12:50 AM | Last Updated : 04th August 2019 12:50 AM | அ+அ அ- |

கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில், பாலியல் குற்றத் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
அண்ணா மேம்பாலம் அருகே இந்தப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பள்ளி வயதில் படிப்பு வேண்டும், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் குழந்தையைக் காப்போம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நகர அரங்கு வரை பேரணியாகச் சென்றனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீஅபிநவ் பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக 159 பாலியல் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு 55 ஆண்டுகள் தண்டனையும், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி காவல் நிலைய வழக்குகளில் தலா ஒருவருக்கு ஆயுள் சிறைத்
தண்டனையும் நீதிமன்றம் மூலமாக வழங்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு மேல் 17 பேருக்கு சிறை தண்டணை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 பேருக்கு இந்த வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியன், மாவட்ட குழந்தைகள் நலக் கமிட்டி தலைவர் ஹென்றி லாரன்ஸ், தொழிலாளர் துறை அலுவலர் ஞானபிரகாசம், தொழிலாளர் துறை உதவி ஆணையர் பாஸ்கரன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமாவளவன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ்குமார், காவல் ஆய்வாளர் உதயகுமார், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.