வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா: சிதம்பரம் மாணவி தேர்வு
By DIN | Published On : 04th January 2019 08:50 AM | Last Updated : 04th January 2019 08:50 AM | அ+அ அ- |

சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா பள்ளி மாணவி, வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பின்படி அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கிய துறைகளில் தனித்து விளங்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில், முதல் கட்டமாக 50 மாணவர்கள் வெளி நாடுகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தின்கீழ், பட்டாசு ஆலைகளில் தீ விபத்து தடுப்பு முறைகள் என்ற தலைப்பில், சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் மாணவி பூஜா தயாரித்த அறிவியல் காட்சிப் பொருள் மாநில அளவிலான கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கண்காட்சியிலும் மாணவி பூஜா பங்கேற்றார். தற்போது, பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய வெளிநாடுகளுக்கு அறிவியல் கல்விச் சுற்றுலா செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக அளவிலான 50 பேர் கொண்ட குழுவில் மாணவி பூஜா இடம் பெற்றுள்ளார். இவருக்கு சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் சி.சுவாமி முத்தழகன் வாழ்த்து தெரிவித்தார். பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற இறைவணக்கக் கூட்டத்தில் மாணவி பூஜாவுக்கு பள்ளி நிர்வாகிகள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், எஸ்.ஆர்.ராமநாதன், எஸ்.ஆர்.திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர் மு.சிவகுரு ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.